Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நித்யானந்தா வழக்கு: பெண் சீடர்கள் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் புதிய தகவல்

டிசம்பர் 12, 2019 07:16

புதுடெல்லி: குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இயங்கி வந்த ஆசிரமத்தல் தனது குழந்தைகளை சித்ரவதை செய்வதாகவும், குழந்தைகளை பார்க்க தன்னை அனுமதிக்கவில்லை என்றும் ஜனார்த்தன சர்மா அகமதாபாத் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரணை நடத்தி 1 மகள் மற்றும் மகனை மீட்டனர்.

ஆனால் மற்ற 2 மகள்கள் ஆசிரமத்தில் இல்லை. அவர்களை மீட்டுதரக்கோரி ஜனார்த்தன சர்மா குஜராத் ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதன்பேரில் ஜனார்த்தன சர்மாவின் மகள்களை கண்டுபிடித்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அகமதாபாத் போலீசாருக்கு கோர்ட்டு உத்தரவிட்டது.

இதற்கிடையே ஜனார்த்தன சர்மாவின் 2 மகள்களும் நித்யானந்தாவின் சீடர்களாக மாறியதும் விசாரணையில் தெரியவந்தது. அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தக்கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தபோது போலீசாரை நீதிபதி கடுமையாக சாடினார்.

அதற்கு போலீசார் தரப்பில், ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சாலைமார்க்கமாக நேபாளம் சென்றுள்ளனர். அங்கிருந்து கரீபியன் தீவான டிரினிடாட்டுக்கு சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு 20-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜனார்த்தன சர்மாவின் மகள்கள் சார்பில் கோர்ட்டில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தனர். அதில் எங்களுடைய தந்தை ஜனார்த்தன சர்மாவுடன் செல்ல எங்களுக்கு விருப்பம் இல்லை. நாங்கள் அமெரிக்காவின் விர்ஜீனியர்வில் இருக்கிறோம். ஆனால் சரியான இடம் குறித்த விவரம் எங்களுக்கு தெரியாது என கூறி உள்ளனர்.

அவர்களின் சார்பில் கோர்ட்டில் வாதாடிய வக்கீல் கூறுகையில், ‘பெண்களின் உயிருக்கு அவர்களது தந்தையால் ஆபத்து உள்ளது. அவர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. சமூக வலைதளத்தில் உரையாடிய பிறகு தான் அவர்கள் விர்ஜீனியாவில் இருக்கிறார்கள் என தெரிந்தது. ஆனால் தெளிவான முகவரி இல்லை. கோர்ட்டு சம்மதித்தால் அவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் விசாரணைக்கு ஆஜராக தயாராக இருக்கிறார்கள்’ என கூறினார்.

தலைப்புச்செய்திகள்